21/04/2026
பாரிஜாத மலர் செடி அவ்வளவு சுலபமாக கிடைப்பதில்லை. கிடைத்தால் விட்டு விடாமல் உடனே வாங்கி வந்து வளர்க்கலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் இடத்தில் இருந்தால் பதியம் செய்தும் வாங்கி வரலாம். தேவலோகத்தில் பெருமாள் பாரிஜாத மலரில் வீற்றிருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அவர் பூலோகத்திற்கு வரும் பொழுது இந்த மலர் தேவைப்படுவதால் இவை பூலோகத்திற்கு வந்தது என்று புராணங்கள் உள்ளன.
அதிக மருத்துவ பயனுள்ள இந்த பூவை நிறைய பயன்பாடுகளுக்கு பயன்படுத்தி வருகின்றனர். சிறிய தொட்டியில் கூட அருமையாக வளர்ந்து நறுமணமிக்க பெரிய பெரிய பூக்களை நமக்கு கொடுக்கும். பாரிஜாத மலர் சரியாகப் பூக்கவில்லை, மொட்டுக்கள் உதிர்ந்து விடுகிறது என்றால் அதற்கு தேவையான சத்துகள் கிடைக்கவில்லை என்று அர்த்தம்.
பாரிஜாத மலரை பொறுத்தவரை முக்கிய சத்து ‘போரான் சத்து’ அவசியம் தேவைப்படுகிறது. இந்த சத்தானது எருக்கம் செடியின் இலைகளில் அதிகம் இருப்பதால் எருக்கம் இலைகளை எடுத்து வந்து நன்கு கசக்கி தண்ணீரில் ஒரு நாள் முழுவதும் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மறுநாள் அந்த தண்ணீரை மட்டும் வடித்து பாரிஜாத மலர் செடிகளின் தொட்டிகளில் ஊற்றி வந்தால் பாரிஜாத மலர் பெரிய பெரியதாக அருமையாக பூத்துக் குலுங்கும்.
பாரிஜாத செடியை பொறுத்தவரை வெட்டுக்கிளி மற்றும் கருப்பு வண்டுகள் தொந்தரவுகள் இருக்கும். இதனை சரி செய்ய வேப்ப எண்ணையை ஸ்ப்ரே செய்யலாம். மற்றபடி பெரிதாக இதற்கு பராமரிப்பு என்று ஒன்றும் தேவைப்படுவது இல்லை. பெருமாளுக்கு இந்த மலரை சாற்றுவது செல்வ செழிப்பை உண்டாக்கும் என்பது ஐதீகம். பாரிஜாத மலரை கண்களின் ஆரோக்கியத்திற்கும், குளிர்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
பாரிஜாத மலரை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி நறுமண மூலிகை எண்ணெயாக தலைக்கு தடவுவார்கள். இத்தகைய அற்புதமான செடியை மட்டும் வளர்த்தால் உள்ளமும், மனமும் நிறைந்து விடும். பெரும்பாலும் வெள்ளை, மஞ்சள், ஆரஞ்சு நிறங்களில் இவை கிடைக்கின்றன.