01/07/2026
ஒரே விதை
தஞ்சாவூர் மாவட்டத்தில் ஒரு குக்கிராமம்.
அங்கே இருந்த ஒரு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பத்தொன்பது வயதே ஆன ஒரு இளம்தாய் இரண்டு ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்தாள். ஆனால், பிரசவத்தின்போது அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டதால், குழந்தைகளைப் பார்த்த சில நிமிடங்களிலேயே அவள் இறந்துவிட்டாள்.
குழந்தைகளின் தந்தை யார் என்று யாருக்கும் தெரியாது. ஆதரவற்ற அந்த இரண்டு பிஞ்சுகளும், ஒரே துணியில் சுற்றிவைக்கப்பட்டு, மருத்துவமனையின் தொட்டிலில் அருகருகே கிடந்தன.
கிராமத்தில் செய்தி பரவியது. அடுத்த ஒரு வாரத்திற்குள், அந்த குழந்தைகளைத் தத்தெடுக்க இரண்டு குடும்பங்கள் வந்தன.
முதல் நபர், மும்பையிலிருந்து வந்த ஒரு பணக்காரத் தொழிலதிபர். திருமணமாகி பதினோரு ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லாததால், அவர் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொண்டார். அவனுக்கு 'ரோகன்' என்று பெயர் வைத்தார்.
இரண்டாவது நபர், அதே கிராமத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி. அவருக்குச் சொந்தமாக இரண்டு ஏக்கர் நிலமும், ஒரு ஜோடி மாடுகளும் இருந்தன. மற்றொரு குழந்தையைத் தத்தெடுத்து, அவனுக்கு 'செல்வம்' என்று பெயர் சூட்டினார்.
இப்படி, விவரம் புரியும் வயதுக்கு முன்பே அந்த இரட்டையர்கள் பிரிந்தார்கள். ஒருவன் பெருநகரமான மும்பைக்குப் போனான். மற்றொருவன் அதே சின்னஞ்சிறு கிராமத்தில் வளர்ந்தான். தங்களுக்கு ஒரு அண்ணனோ தம்பியோ இருக்கிறான் என்ற உண்மை இருவருக்குமே தெரியாது.
பணத்துக்கும் மனசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதை காலம் நிரூபித்தது. இரண்டு வேறுபட்ட சூழலில் வளர்ந்தாலும், காலம் அவர்கள் இருவரையும் ஒரே மாதிரிதான் நடத்தியது.
#பதினைந்து_வயதில்: இரண்டு பேருக்கும் தூக்கம் தொலைந்தது. ரோகன் மும்பையில் ஏசி அறையில் தூக்கமில்லாமல் தவித்தான். செல்வம் கிராமத்தில் ஓலை கூரையின் கீழ் பாயில் விழித்துக் கிடந்தான். இருவருக்கும் காரணமில்லாத கோபம் வந்தது. இரண்டு பேரும் தங்கள் வளர்ப்புத் தந்தையிடம் அடிக்கடி சண்டை போட்டார்கள்.
#பத்தொன்பது_வயதில்: இருவருமே ஒரு பெரிய சோகத்திற்குள் மூழ்கினார்கள். எதற்காக இந்த சோகம் என்று அவர்களுக்கே தெரியாது. ஒரு கண்ணுக்குத் தெரியாத பாரத்தை மனசுக்குள் சுமந்துகொண்டே அலைந்தார்கள். சில மாதங்களில், அது தானாகவே குறைந்தது. இருவருக்கும் இது ஒரே மாதிரி நடந்தது.
#இருபத்திமூன்று_வயதில்: இருவருக்கும் திடீரென்று ஒரு அதீத ஆற்றலும், வேகமும் வந்தது. ரோகன் அவசரமாக மூன்று புதிய தொழில்களைத் தொடங்கி, மூன்றையும் பாதியிலேயே கைவிட்டான். செல்வம் அளவுக்கு அதிகமாக நிலங்களைக் குத்தகைக்கு எடுக்க ஆசைப்பட்டு, ஊரில் பலரிடம் சண்டை போட்டு, இருந்த சொந்த நிலத்தையும் இழக்கும் நிலைக்குப் போனான்.
#முப்பது_வயதில்: இருவரின் மனதும் மீண்டும் மந்தமானது. எதிலும் ஈடுபாடோ, நாட்டமோ இல்லை.
ரோகன் நெய்யும் பாதாமும் சாப்பிட்டு வளர்ந்தான்; செல்வம் கஞ்சியும் கூழும் குடித்து, வளர்ந்தான். இருந்தாலும் இருவரின் உடலமைப்பும் ஒரே மாதிரியாக இருந்தது. ரோகனின் தோல் வெயில் படாததால் சிவப்பாக இருந்தது. அவ்வளவுதான் வித்தியாசம். ஆனால், மனப்போராட்டங்கள் மட்டும் ஒரே வயதில், ஒரே மாதிரி வந்தன.
அவர்கள் இருவரையும் தனித்தனியாக உட்கார வைத்துக் கேட்டிருந்தால், வாழ்க்கையைப் பற்றி ஏறக்குறைய ஒரே பதிலைத்தான் சொல்லியிருப்பார்கள்.
★இருவருமே மனிதர்களை அவ்வளவு எளிதில் நம்ப மாட்டார்கள்.
★சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட எளிதில் காயப்படுவார்கள்.
★இருவரும் பண விஷயத்தில் சிக்கனம் என்பதை தாண்டி ஏறக்குறைய கஞ்சத்தனம் என்றே சொல்லும் அளவுக்கு இருப்பார்கள். வறுமையான சூழலில் வாழும் செல்வம் மட்டுமல்ல; சில நூறு கோடிகளை வைத்திருக்கும் ரோகனும் கஞ்சத்தனமாக தான் இருப்பான்.
வீடு, உணவு, படிப்பு, பணம், வளர்ப்பு என எல்லாமே வேறு வேறு. ஆனால், அவர்களை இணைக்கும் ஒரே ஒரு விஷயம் அவர்களின் மரபணு. அந்த மரபணுதான் அவர்கள் இருவரின் வாழ்க்கையையும் தீர்மானித்தது.
#முப்பத்தைந்தாம்_வயது
அவர்களுக்கு முப்பத்தைந்து வயது ஆனபோது, அந்த விவரிக்க முடியாத சோகம் இருவரையும் மீண்டும் தாக்கியது. ஆனால், இந்த முறை அது அவர்களை விட்டுப் போகவில்லை. நெஞ்சின் மேல் ஒரு பாறை போல அழுத்தி உட்கார்ந்துகொண்டது.
இங்குதான் அவர்கள் இருவரின் வாழ்க்கையும் இரண்டு வெவ்வேறு திசைகளில் பயணிக்கத் தொடங்கியது. ஏனென்றால், அவர்களின் குடும்பங்கள் இந்த நோயை இரண்டு வெவ்வேறு விதமாகக் கையாண்டன.
செல்வத்தின் அப்பாவுக்கு 'மனச்சோர்வு' (Depression) என்றால் என்னவென்றே தெரியாது. தன் மகன் சரியாகச் சாப்பிடுவதில்லை, யாரிடமும் பேசுவதில்லை, பேயறஞ்ச மாதிரி வெறிச்சுப் பார்க்கிறான் என்பது மட்டுமே அவருக்குப் புரிந்தது. மகனின் அந்தப் பார்வை அவரைப் பயமுறுத்தியது.
பக்கத்து வீட்டில் இருந்த ஒரு பெண்மணி, " அரசு மருத்துவமனையில் மனநோய் டாக்டர் இருக்கார், அங்கே கூட்டிட்டுப் போங்க" என்றார். முதலில் விவசாயிக்குச் சற்று தயக்கமாக இருந்தாலும், அவனுக்கு என்னவாகி விடுமோ என்ற பயம் அதிகமாக இருந்தது. அதனால், மகனை அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினார்.
அந்த டாக்டர் எந்த மாயாஜாலமும் செய்யவில்லை. செல்வம் சொல்வதை அமைதியாகக் கேட்டார். பிறகு விவசாயியிடம், "ஐயா, இதுவும் ஒரு சாதாரண நோய்தான். மற்ற உடம்பு வலிகளைப் போலத்தான் இதுவும். இது எந்தக் கடவுளும் கொடுத்த தண்டனையும் இல்லை, உங்கள் மகனின் பலவீனமும் இல்லை," என்று தெளிவாகப் புரிய வைத்தார்.
சில மாத்திரைகளைக் கொடுத்து, "குணமாகக் கொஞ்சம் நாளாகும், தொடர்ந்து வாங்க" என்று அனுப்பி வைத்தார்.
விவசாயி அந்த மாத்திரைகளைச் சந்தேகமாகப் பார்த்தார். 'இது வெறும் தூக்க மாத்திரைதானே? இது எப்படி மனசுல இருக்கிற துக்கத்தைக் குணப்படுத்தும்?' என்று குழம்பினார்.
ஆனால் அவருக்கு வேறு வழியில்லை. பெரிய சாமியார்களிடம் சென்று பரிகாரம் செய்ய அவரிடம் பணமும் இல்லை. அதனால், டாக்டர் சொன்னபடியே மகனுக்குத் தவறாமல் மாத்திரை கொடுத்தார். உடனடியாக எந்த மாற்றமும் நிகழவில்லை.
ஆனால், சில வாரங்களில் செல்வத்தின் மனப்பாரம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்தது. அவனுக்கு அவனது பழைய வாழ்க்கை திரும்பக் கிடைத்தது. ஊரிலேயே ஒரு பெண்ணைத் திருமணம் செய்துகொண்டான். மீண்டும் விவசாயத்தைக் கவனிக்கத் தொடங்கினான். வாழ்க்கையில் ஏற்ற இறக்கங்கள் இருந்தாலும், அவன் சந்தோஷமாக வாழ்ந்தான்.
ரோகனின் அப்பாவுக்கு தன் மகனுக்கு 'மனநலப் பிரச்சினை' இருக்கிறது என்ற உண்மையை யாருடனும் பகிர்ந்துகொள்ள முடியவில்லை. ஏன் அவராலேயே ஏற்றுக் கொள்ள முடியவில்லை. புரிந்து கொள்ளவும் முடியவில்லை
"மனசுக்குத் ட்ரீட்மென்ட் எடுத்த பையன்னு தெரிஞ்சா, இந்த ஊர்ல எவன் பொண்ணு கொடுப்பான்? நம்ம கௌரவம் என்ன ஆவது?" என்று அவர் பயந்தார். அதனால், மகனின் பிரச்சினை வீட்டை விட்டு வெளியே யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்.
முதலில் ஒரு பிரபல சாமியாரிடம் சென்றார்கள். அவர் திருநீறு, தாயத்து கொடுத்துப் பார்த்தார்; எதுவும் சரியாகவில்லை. தோஷம் கழிக்கிறோம் என்று நதிக்கரையில் பரிகார பூஜைகள் செய்தார்கள்; அப்போதும் சரியாகவில்லை.
இறுதியாக அப்பா ஒரு முடிவுக்கு வந்தார். "இது நோய் இல்லை, இவனோட குணத்தில்தான் பிரச்சினை" என்று நினைத்து, மகனை அமெரிக்காவிற்கு 'பர்சனாலிட்டி டெவலப்மென்ட்' (ஆளுமைத் திறன் வளர்ப்பு) பயிற்சிக்கு அனுப்பி வைத்தார். படுக்கையை விட்டு எழுந்திருக்கவே தெம்பில்லாத ஒருவனுக்கு, தன்னம்பிக்கை வகுப்பு எப்படி உதவும்?
இந்த ஓட்டங்களுக்கு நடுவில், ரோகனைப் பார்த்த ஒரு டாக்டர் மனநல மாத்திரைகளைப் பரிந்துரை செய்தார். ஆனால் குடும்பத்தினர் அதை ஏற்க மறுத்துவிட்டார்கள். 'மாத்திரை சாப்பிடுவது பலவீனத்தின் அடையாளம்' என்று அவர்கள் நம்பினார்கள். அந்த மாத்திரைகள் பெட்டியிலேயே திறக்கப்படாமல் கிடந்தன. அதற்குப் பதிலாக, "பாசிட்டிவ்வா யோசி, சாமி கும்பிடு, தைரியமா இரு" என்று அவனுக்கு அறிவுரைகளை மட்டும் வாரி வழங்கினார்கள்.
#நாற்பத்தைந்து_வயதில், அவர்கள் இருவரையும் இப்போது பக்கத்துப் பக்கத்தில் வைத்துப் பாருங்கள். பிறந்தபோது ஒரே துணியில் அருகருகே கிடந்தார்களே, அதே போல.
செல்வம்: ஏழை விவசாயியின் மகன். பணமும் வசதியும் குறைவுதான். ஆனால், அவன் நன்றாக இருக்கிறான். இரவில் நிம்மதியாகத் தூங்குகிறான். வயலில் வேலை பார்க்கிறான். தன் குடும்பத்துடன் சந்தோஷமாக இருக்கிறான்.
ரோகன்: நாளுக்கு நாள் மெல்ல மெல்ல உடைந்து கொண்டிருக்கிறான். முக்கியமாக, அவனது உடல் முழுமையாகச் சிதைந்துவிட்டது.
பயம் காரணமாகவும், கௌரவம் காரணமாகவும் அவர்கள் மறைத்து வைத்த அந்த மனநோய், மறைத்ததால் மட்டும் காணாமல் போய்விடவில்லை. அது அவனுக்குள் ஆழமாக இறங்கி, வெளியேற வேறு வழி தேடியது.
முடிவில், அவனது உடம்பின் வழியாக நோய்களாக வெடித்துக் கிளம்பியது.
அவனுக்குச் சர்க்கரை நோய் வந்தது; எவ்வளவு மருந்து சாப்பிட்டும் குறையவில்லை.
கைகளில் சொரியாசிஸ் (தோல் நோய்) வந்தது; மன அழுத்தம் அதிகரிக்கும்போதெல்லாம் அது ரணமாக மாறியது.
வயிறு முழுமையாகக் கெட்டுப்போனது (IBS).
இரவில் தூக்கத்திலே பல வருடங்கள் பற்களை நரநரவென்று கடித்ததால், தாடை எலும்புகள் தேய்ந்து வலி எடுத்தது.
எந்த வேலையிலும் கவனம் செலுத்த முடியாததால் மூன்று தொழில்களும் நஷ்டத்தில் மூழ்கின. ஆடம்பரமாக நடந்த அவனது திருமணமும் விவாகரத்தில் முடிந்தது.
ரோகன் சென்ற மருத்துவமனைகளில் உள்ள டாக்டர்கள், அவனது சர்க்கரை நோயை, தோல் நோயை, வயிற்றுப் பிரச்சினையை என ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்த்தார்களே தவிர, இவை அனைத்திற்கும் ஆணிவேராக இருக்கும் அவனது 'மனச்சோர்வை' யாரும் இணைத்துப் பார்க்கவில்லை.
அதற்குக் காரணம், அந்த உண்மை வெளியே தெரியாதபடி அவனது குடும்பம் முப்பது வருடங்களாக அதைச் சாமர்த்தியமாக மறைத்து வைத்திருந்ததுதான்.
செல்வம் தன் பிரச்சினைக்கு 'மனச்சோர்வு' என்று பெயர் சொல்லி, மருத்துவரிடம் சரியான சிகிச்சை எடுத்தான்.
ஆனால் ரோகனோ, அந்தப் பெயரைக் உச்சரிக்கக் கூச்சப்பட்டு, அதைத் தவிர மற்ற எல்லாப் பெயர்களாலும் அழைத்தான்.
அதற்கான விலையை அவனது உடல் செலுத்தியது. சர்க்கரையாக, தோல் நோயாக, குடல் புண்ணாக, வெளியே சொல்ல முடியாத வார்த்தைகளை அடக்கி வைத்து இறுகிப்போன தாடையாக, தன் உடலையே உருக்கி அந்த வலியைச் சுமந்தான்.
எந்த வசதியும் இல்லாத ஒரு சாதாரண விவசாயியின் மகன், இன்று நோயின்றி நிம்மதியாக வாழ்கிறான்.
இருவருக்கும் ஓடுவது ஒரே ரத்தம். வந்தது ஒரே பிரச்சினை. அது தொடங்கிய வயதும் ஒன்றுதான்.
ஆனால், ஒரு குடும்பம் அதை 'நோய்' என்று ஏற்றுக்கொண்டு சாதாரண மருத்துவரிடம் காட்டியது. மற்றொரு குடும்பம் கௌரவம் பார்த்து அதை மறைத்தது.
நோயை எழுதியது அவர்களின் மரபணு. ஆனால், அவர்கள் இருவரின் முடிவையும் எழுதியது அவர்களின் அணுகுமுறை!
இதில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்ன தெரியுமா?
சர்க்கரை நோய் (type 2 diabetes),
சோரியாசிஸ்,
வயிற்றுப் பிரச்சனைகள் (irritable bowel) மற்றும்
தாடை எலும்புகள் தேய்மானம் (TMJ dysfunction) எதுவுமே செல்வத்துக்கு வரவில்லை.
டாக்டர் ஆனந்தன்
1/07/2026
#மனநலம் #மனநலவிழிப்புணர்வு #விதிவிதைவிஞ்ஞானம் #ஒரேவிதை #மரபியல் #மனச்சோர்வு #மனநோய்சிகிச்சை #களங்கம்வேண்டாம் #தமிழ்இலக்கியம் #சிறுகதை #தமிழ்எழுத்து #உளவியல் #மனநலமருத்துவம் #விஞ்ஞானம் #தமிழ்