30/08/2026
🟤⚪ 🟤 2085-வது நாளின் காலைத்தியானம் 31/08/2026 !!!
இந்த மாதத்தின் கடைசி நாளில் "அவர் உங்களிடத்தில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தார் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்"..… "CONSIDER WHAT GREAT THINGS HE HAS DONE FOR YOU” என்று (1SAMUEL) 1 சாமுவேல் 12:24-ல் காணப்படும் வேதபகுதியை வைத்து தியானிக்கப் போகிறோம்.
இஸ்ரவேல் மக்களுடைய வாழ்க்கையில் கர்த்தர் செய்த அற்புதங்களையும் வழிநடத்துதல்களையும், சாமுவேல் ஞாபகப்படுத்தி, அவைகளைச் சிந்தித்துப் பாருங்கள் என்று கூறுகின்றார்.
நாமும் நம் வாழ்வில், தேவன் இதுவரை செய்த நன்மைகள் மற்றும் இக்கட்டான சூழ்நிலைகளில் தந்த விடுதலையைச் சிந்தித்துப் பார்ப்போம். அப்போது, முழு இருதயத்தோடும், உண்மையாகவும் அவருக்கு நன்றி செலுத்தி அவரையே சேவிக்க முற்படுவோம்.
வேதத்தில், இயேசு செய்த முதலாம் அற்புதம் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றியதுதான். யோவான் 2:11-ல் “இவ்விதமாக இயேசு இந்த முதலாம் அற்புதத்தைக் கலிலேயாவிலுள்ள கானா ஊரிலே செய்து, தம்முடைய மகிமையை வெளிப்படுத்தினார்” என்று பார்க்கிறோம்.
அன்று மகிமையான அற்புதங்களைச் செய்த இயேசு, இன்றும் நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்ய ஆவலாயிருக்கிறார். ஆகவே, எப்பேர்பட்ட கடினமான பாதைகளை கடந்து வந்தாலும், கர்த்தர் நமக்கு இதுவரை செய்த மகிமையான காரியங்களை எண்ணிப் பார்ப்போம். நிச்சயமாகவே நமது கவலைகள் நீங்கி, உள்ளத்தில் சமாதானமும், துதியும் பெருகும்.
எனவே பிரியமானவர்களே,“வல்லமையுடையவர் மகிமையான காரியங்களை எனக்குச் செய்தார்” என்று மரியாள், கர்த்தருடைய நாமத்தை உயர்த்தினது போல நாமும் உயர்த்துவோம். கர்த்தர் நம் வாழ்வின் தோல்வியை வெற்றியாய் மாற்றிக் கொடுப்பார்.
ஜெபம்: இந்த நாளின் வார்த்தையின்படியே, கர்த்தராகிய நீர், இதுவரை எங்கள் வாழ்வில் எவ்வளவு மகிமையான காரியங்களைச் செய்தீர் என்பதைச் சிந்தித்துப்பார்த்து, இப்போதும் அற்புதத்தைச் செய்வீர் என்று விசுவாசித்து ஜெபிக்கிறோம். இயேசுவின் மூலம் ஜெபம் கேளும் எங்கள் அன்பின் பரலோகப் பிதாவே…ஆமென்.
ஜெப தேவைகளுக்கும் ஆலோசனைகளுக்கும்
24/7- 9967228488
WhatsApp- 7400472200.
Dr. RSA Williams
Sis. Princy Williams
SGRM - Chennai India.
NMPF - Mumbai India