24/04/2026
17.04.2026 எனது அரச மருத்துவப் பயணத்தின் நிறைவு நாளாகும். அதற்காய், நம் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலை எனக்காக நடத்திய பிரியாவிடை நிகழ்வு - என் நெஞ்சை நெருடி நெகிழவைத்தது! அது மிகப் பசுமையானது! அன்று அந்தப் பசுமைகளோடு என் பயணப் பாதையைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தேன்...
பல முகங்கள் என் நினைவில் நிழலாடுகின்றன. இன்று நான் பெற்றிருக்கும் இந்த கௌரவத்திற்கும் பெறுமானத்திற்கும் காரணமான அந்த ஒவ்வொருவரையும் நினைவுகூர்கிறேன்.
*
என்னை ஒரு வைத்தியராகக் காண- வழிநடத்திய சான்றோர்களே, உறவுகளே, நண்பர்களே, நலன் விரும்பிகளே, எனக்குள் ஒரு சுகமான உணர்வை விளைவித்த, உங்கள் பாசத்தடங்கள்- என் மனதின் மத்தியில் இப்போதும் மகிழ்ச்சிகளாய் மிதந்து திரிகின்றன.
*
என் பணிநிறைவு நாளிலும் அதற்குப்பின்னும் என்னை வாழ்த்திய, எனக்காகப் பிரார்த்தித்த நல்லுறவுளே, உங்களுக்கு என்மீதுள்ள ஈரகாசத்தையும் கனிவையும் நினைக்கையில் மகிழ்ந்து போகிறேன்... உணர்கையில் நெகிழ்ந்து கசிகிறேன்.
*
மருத்துவர் என்ற எனது இத்தனை ஆண்டுகால பயணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிய உங்கள் அனைவருக்கும் நெக்குருகி நன்றி சொல்கிறேன்...
*
சக மனிதர்களுக்குச் சேவை செய்யும் ஒரு உன்னதமான வாய்ப்பை எனக்கு வழங்கி, இக்கட்டான சூழல்களில் சரியான முடிவெடுக்க, எனக்குள் ஒளி பாய்ச்சி வழி காட்டிய பேராற்றல் கொண்டவனை, அந்த எல்லாம் வல்ல றஹ்மானை, எனது சிரம் தாழ்த்தி, தரையில் நெற்றி பதித்து நன்றி சொல்கிறேன். என் வாழ்வின் ஒவ்வொரு நொடியிலும், ஒவ்வொரு சவாலிலும், ஒவ்வொரு வெற்றியிலும், அவனருள் என்னுள் கேடயமாகவே இருக்கிறது.
*
என்னை ஒரு மருத்துவனாக்கக் கனவு கண்ட என் பெற்றோர்களும் உடன் பிறப்புகளும் அவர்களின் உவப்பும் உழைப்பும் நம்பிக்கையும் நயமும் அவர்கள் ஊட்டிய ஒழுக்கமும் நேர்மையுமே என்னை வனப்பாக வழி நடத்தின. அவ்வாறே என் பணியை சிறப்பாகச் செய்யத் தோளோடு தோள் நின்று- என் மனையாளும் என் குழந்தைகளும் தந்த அளப்பரிய ஆதரவுகள், ஒருபோதும் ஈடு செய்ய முடியாதவை. இந்தப் பொலிப்பான பணி நிறைவை இவர்கள் அனைவருக்கும் சமர்ப்பிக்கிறேன்.
*
பாடசாலைக் கல்வியின் வித்யாரம்ப நாள் தொட்டு உயர்தரம் கற்றுத் தேறி வரும்வரை, அறிவின் வீரியவிதைகளை என்னுள் விதைத்து, மனிதநேயத்தின் பாதையில் என்னைப் பார்த்துப் பார்த்துச் செதுக்கி வழிநடத்திய, ஆசிரியர்களினதும் அதிபர்களினதும் அர்ப்பணிப்புத்தான் என் வாழ்வின் அடித்தளம்; அந்நாட்களில் கிடைத்த ஒவ்வொரு சிறிய உதவியும், ஒவ்வொரு ஊக்கமும் ஊட்டலும் என் இந்த மகத்தான பயணத்தை எளிதாக்கின.
அவ்வாறே மருத்துவ நுணுக்கங்களைக் கற்றுத் தந்து என்னைச் செதுக்கிய பல்கலைக்கழகப் பேராசிரியர்கள்- இவர்கள் வெறும் பாடங்களை மட்டும் எனக்குக் கற்பிக்கவில்லை; ஒரு மருத்துவர் கொண்டிருக்க வேண்டிய மனிதாபிமானத்தையும் குழைத்தே என்னை வளர்த்து விட்டவர்கள். அவர்களுக்கெல்லாம் எனது நெஞ்சார்ந்த நன்றிகள்.
என்னோடு தோளோடு தோள் நின்று உற்சாகத்தோடும் உவந்தும் பணியாற்றிய சக மருத்துவர்களுக்கும் மருத்துவமனை நிருவாகத்திற்கும், இரவு பகல் பாராது உழைத்த கசிவுள்ள செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் மனமுவந்து நன்றி பாராட்டுகிறேன். ஒரு குழுவாக நாம் செய்த ஒவ்வொரு சாதனையும் என் நினைவு வெளிகளில் என்றும் பசுமையாகவே இருக்கும்! உங்கள் ஒத்துழைப்பின்றி இந்தப் பயணம் சாத்தியமாகி இருக்காது என்பது நிஜம்.
சேர்ந்திருக்க வேண்டிய பொழுதுகளில், மருத்துவப் பணியின் கடுகதியினால் நான் சேராமல் போனாலும் அந்த யதார்த்தமுணர்ந்து இங்கிதாமாய் உறவு காத்துக் கைகோத்து, என் வாழ்வின் இன்ப துன்பங்களில் பங்கெடுத்து, அவ்வப்போது ஆலோசனைகளும் உற்சாகமும் அளித்த, அன்புக்கினிய நண்பர்களுக்கும் நலம் விரும்பிகளுக்கும் என் நெஞ்சு தொட்டு நன்றி சொல்கிறேன்.
சுகம் பெற மருத்துவம் நாடிவந்து, எனது சிகிச்சையில் நம்பிக்கை வைத்து வந்த உறவுகளே, உங்கள் வலிகளை குணப்படுத்தி, நீங்கள் சுகம் பெற்றதும், உங்கள் முகங்கள் பூத்த புன்னகையும் உங்கள் வார்த்தையில் தெரிந்த உங்கள் ஆறுதல்களும் எனக்கான மிகப்பெரிய விருதுகளாய் எண்ணி திருப்தி கொள்கிறேன். ஒரு மருத்துவனாக என்னை முழுமையடையச் செய்தது நீங்கள்தான்.
இந்நாளில் சமூக வலைத்தளங்கள் வாயிலாகவும், நேரடியாகவும் வாழ்த்துகளைத் தெரிவித்த நண்பர்கள், நலன்விரும்பிகள் அனைவருக்கும் நன்றிகள். உங்களின் ஒவ்வொரு அன்புச் செய்தியும் எனக்கு இன்பச் செய்தியாய் பெரும் உற்சாகத்தைத் தந்தது.
அந்த வல்ல நாயன் நம் அனைவரையும் நல்லோர் வரிசையில் இணைப்பானாக! ஆமீன்!
மனம் நிறைந்து வழியும் நன்றிகளுடன் விடைபெறும்...
உங்கள் அன்பு சகோதரன்,
டாக்டர் எம்.ஏ.எம். பசீர்
24.04.2026