12/07/2026
உலகத்திற்கு
ஒளி தந்த பலர்…
தங்கள் வாழ்க்கையை
இருளோடு கடந்தவர்கள்
மற்றவர்களின் கண்ணீரைத் துடைக்க
கைகளை நீட்டியவர்கள்
தங்கள் கண்ணீரை மட்டும்
அமைதியின் இருளில்
துடைத்துக்கொண்டவர்கள்
வாழ்ந்து மறைந்தவர்களிலும்
அப்படிப்பட்டவர்கள் இருந்தார்கள்.
இன்றும்
மற்றவர்களின் வாழ்வில்
ஒளி ஏற்றிக்கொண்டிருக்கும்
பலரின் உள்ளங்களிலும்
சொல்லப்படாத இரவுகள்
இன்னும் வாழ்ந்துகொண்டே இருக்கின்றன.
இந்தக் கவிதை
அப்படிப்பட்ட
அமைதியான ஒளிகளுக்கான
ஒரு சிறிய வணக்கம்.
👇👇👇👇👇
திரைக்குப் பின்னால்
⚘️⚘️⚘️⚘️
உலகம்
கொஞ்மாவது சிந்திக்க வேண்டும்…
மனிதன்
மனிதனை நேசிக்க வேண்டும்…
வாழ்க்கை
இன்னும் கொஞ்சம் அழகாக வேண்டும்…
என்ற ஆசையோடு,
பலர்
தங்கள் வாழ்நாளையே
விதையாக விதைத்துச் சென்றார்கள்.
மகான்கள்…
கலைஞர்கள்…
கவிஞர்கள்…
சமூகச் சிந்தனையாளர்கள்…
அவர்கள்
புத்தகங்களை மட்டும் எழுதவில்லை.
மனித மனங்களையும்
எழுதினார்கள்.
பாடல்களை மட்டும் படைக்கவில்லை.
உடைந்து கிடந்த
இதயங்களுக்கு
மீண்டும் துடிக்கக்
கற்றுக்கொடுத்தார்கள்.
அவர்கள்
தங்கள் சிந்தனைகளை
விற்றவர்கள் அல்ல…
தானமாக வழங்கியவர்கள்.
அவர்கள்
அறிவை மட்டும் பகிரவில்லை…
நம்பிக்கையையும்
பகிர்ந்தார்கள்.
ஆனால்…
திரைக்குப் பின்னால்
அவர்களுக்கும்
ஒரு வாழ்க்கை இருந்தது.
அங்கு
கைத்தட்டல்கள் இல்லை.
சில நேரங்களில்
கை பிடிக்க
ஒரு மனிதர் கூட இல்லை.
உலகம்
அவர்களின் சிரிப்பை மட்டுமே பார்த்தது.
அந்தச் சிரிப்புக்குப் பின்னால்
எத்தனை இரவுகள்
அழுகையால் நனைந்தன என்பதை
யாரும் அறியவில்லை.
அவர்கள்
மற்றவர்களின் கண்ணீரைத் துடைத்தார்கள்.
ஆனால்
தங்களின் கண்ணீரை
அமைதியோடு
துடைத்துக்கொண்டார்கள்.
மற்றவர்களின் மனங்களை
ஆற்றுப்படுத்தினார்கள்.
தங்கள் மனதை மட்டும்
காலத்தின் தோளில்
சாய்த்துவைத்தார்கள்.
அதனால்தான்,
அவர்களின் படைப்புகளில்
வெறும் வார்த்தைகள் இல்லை…
வாழ்ந்து கடந்து வந்த
வலிகளின் வாசனையும் இருக்கிறது.
உண்மையான கலைஞன்,
தன் துயரத்தை
உலகத்தின் துயரமாக மாற்றுவான்.
உண்மையான கவிஞன்,
தன் கண்ணீரை
மற்றவர்களின்
ஆறுதலாக மாற்றுவான்.
உண்மையான மனிதன்,
தன் காயங்களை
பழிவாங்கும் ஆயுதமாக அல்ல…
பிறர் காயப்படாமல் இருக்க
ஒரு பாடமாக மாற்றுவான்.
அதனால்தான்,
காலம்
அவர்களின் உடலை
மண்ணுக்குள் புதைத்தாலும்,
அவர்களின் சிந்தனைகளை
புதைக்க முடியவில்லை.
அவர்கள்
இறந்துவிடவில்லை…
அவர்கள் வாழ்ந்தது...
ஆண்டுகளால் அல்ல,
மற்றவர்களுக்கு
வாழக் கற்றுக்கொடுத்த
அன்பால்..
இறந்தும்
இன்றும் உயிரோடு
இருக்கிறார்கள்.
இருப்பவர்கள் இன்றும்
மனங்களில்
உயிராய் வாழ்கிறார்கள்.
ஒரு மனிதனின் மகத்துவம்,
அவன்
எவ்வளவு மகிழ்ச்சியாக வாழ்ந்தான்
என்பதில் இல்லை…
தன் வலியைத் தாண்டியும்
எத்தனை மனிதர்களுக்கு
ஒளியாக இருந்தான்
என்பதில்தான் இருக்கிறது.
🪻🪻🪻🪻🪻
✍️ ... அஸ்ஹர் அன்ஸார்
(இலங்கை)